பக்கம் எண் :

487

1817.



பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 10
1818.



வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுரன் உரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே.    11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: நல்லூழ் இல்லாத சமண் பாதகர்கள், புத்தராகிய
சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித் திரிவோரின் பார்வைக்கு
அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு
வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், வள்ளன்மையோர் வாழ்வதுமான
திருவையாறு ஆகும்.

     கு-ரை: பாக்கியம் - நல்வினை. இல்-இல்லாத. ஒன்றும்-சிறிதும்.
பதகர்-பாதகர்.பொதிந்து-மறைந்து, மூடி. நோக்கு அரிய தத்துவன்-
நோக்கிற்கு அரிய மெய்ப்பொருளானவன். படி-பூமி. நீடு-வளர்ந்த.
மாக்கம்-விண். மாகம் மாக்கமென விரித்தல் விகாரம், தத்துவனிடம்
திருவையாறு என்க.

     11. பொ-ரை: மணம் நிறைந்த பொழில்களைக் கொண்டுள்ள
வளமான திருவையாற்றுள் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய புகலி
மன்னனும், உண்மை ஞானம் பெற்ற அந்தணனும் ஆகிய ஞான
சம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்,
சிவபிரான் திருவடிக்கண் மிக்க அன்புடையவராவர்.

     கு-ரை: வாசம்-மணம். புகலிமன்னவன்-காழிவேந்தன். மெய்ஞ்ஞானப்
பூசுரன்-திருஞானசம்பந்தன். பூசுரர்-பூ தேவர். நேசம்-அன்பு. பத்தர்-பக்தர்.
நின்மலன்-அழுக்கில்லாதவன். மலரகிதன்.