பக்கம் எண் :

52

                    குறிப்புரை மாட்சி

           தருமை ஆதீனப் புலவர், செஞ்சொற் கொண்டல்

             டாக்டர். திரு. சொ. சிங்காரவேலன்

உலகம் உய்ய:

     திருமுறைகள் உலகுய்ய எழுந்தவை. உயிர்கள் கடைத்தேற
உள்ளம்கொண்ட பெரியோர் திருமொழிகளே திருமுறைகள். இவை
மனிதனது அகவாழ்வை முறைப்படுத்துவன. ‘நீர்வழிப் படூஉம் புணைபோல்
ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பது திறவோர்காட்சி’ என்று புனிதமான
முறையைப்பற்றிப் புறநானூறு சொல்லுகிறது. முறைவழிப்படூஉம் உயிரை
முறை வழிச் செலுத்துவதே திருமுறை. வினையறுப்பதற்குச் சிறந்த மருந்து
திருமுறை. ‘திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே’
என்று சிந்தையினிக்கப்பாடுகிறது சீகாழிக் குழந்தை. உலகம் உய்யத்
திருமுறை எழுந்தது. ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்று
அருளாசியும் வழங்குகிறது. ஆகவே தமிழ்மண்ணிற் பிறந்த
மக்களெல்லோரும் திருமுறைகளைச் ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து
சொல்லுதல்’ இன்றியமையாக் கடமை.

திருமுறைப் பெருமை :

     தருமையை நிறுவிய எங்கள் தனிமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ குருஞான
சம்பந்தப் பெருமான், ‘திருமுறைகள் தாய்’ என்று அருளினார்கள்.
திருமுறைப் பதிகங்கள் அற்புதச் செயல்கள் பலவற்றை நிகழ்த்தியிருக்கின்றன.
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை உண்ட பாலனை
அழைத்ததும் முதலான அற்புதங்கள் திருமுறைத் தெய்வப் பேரொளியால்
நிகழ்ந்தவை. அக்காலத்திலும் திருமுறைகளுக்கு நல்ல பெருமை
மக்களிடத்திலே மண்டிக்கிடந்தது. கல்வெட்டுக்களில் ‘திருப்பதியம்’
என்று சிறப்பாகக் குறிப்பிடும் பெருமை திருமுறைக்கு உண்டு. பத்துப்
பாட்டுக் கொண்ட எவையும் பதிகமாம் எனினும், திரு என்ற அடையோடு
ஆளப்படும் இந்தப் பதிகம் என்ற சொல் தேவாரப்பதிகத்தையே
குறித்ததெனின் இதன் சிறப்புக்கு வேறு