பக்கம் எண் :

581

46. திருநாலூர்மயானம்

பதிக வரலாறு:

     ‘செம்பொன்மலை வல்லியார் அருள்ஞானப்பாலுடை சம்பந்தப்
பெருமான் திரு அரதைப் பெரும்பாழிமுதலாகிய திருத்தலம் பல
அடைந்து வழிபட்ட பின்னர்த் திருநாலூர் மயானம் அடைந்து நயந்து
இறைஞ்சிப்பாடிய நீடுதமிழ்த் தொடை இது.

பண்: சீகாமரம்

ப.தொ.எண்: 182 பதிக எண்: 46

திருச்சிற்றம்பலம்

1960.







பாலூரு மலைப்பாம்பும்
     பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான்
     வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து
     நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால்
     வந்தூரா மறுபிறப்பே.            1


     1. பொ-ரை: பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த
மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப் பெற்ற செஞ்சடையினனும்,
வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து
இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு
வந்து பொருந்தாது.

     கு-ரை: பால்-பக்கத்தில். ஊரும்-ஊர்ந்து செல்லும். மத்தம்-ஊமத்தை.
நம்பான்-சிவன். மால்-அன்பு சிவபக்தி. (பதி.191. பா-6) ‘மாலுங்காட்டி
வழிகாட்டி வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி யாண்டான்’ (திருவாசகம்
ஆனந்த மாலை. 3) ‘மால் கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே’
(தி.4 ப.33 பா.4) ‘மாலொடுந்தொழுவார் வினை வாடுமே’ (தி.5 ப.34. பா.9)
‘என்னிடைமாலும் உண்டு இறை என்றன் மனத்துளே’ (தி.5 ப.35. பா.5)
மறுபிறப்பு வந்து ஊரா-மறு பிறவிகள் வந்து பரவாவாம். ஊரா-செலுத்தா
எனலுமாம். 116