பக்கம் எண் :

588

47. திருமயிலாப்பூர்

பதிக வரலாறு:

     திருவொற்றியூரை வழிபட்டு மயிலாபுரித் திருநகரை அணைந்து,
கபாலீச்சரத்தமுதைப் பரவிப்போற்றிய திருஞான சம்பந்தர், ‘சித்தம் இன்புறு
சிவநேசர்’ பால் திருவருள் செலுத்தி, ‘திருமதிற் புறவாய்தலிற் கொண்டு
வரச் செய்து மங்கையென்பு சேர் குடத்தினை வைத்து வணங்க’ நோக்கி,
மண்ணோரும் விண்ணோரும் காணப், ’பூம்பாவை பேர்செப்பி’, ‘மண்ணினிற்
பிறந்தார் பெறும் உண்மைப்பயன்’ உணர்த்தி, இறைவனை உலகவர் முன்
‘வருக’ என்று உரைத்து, ‘மட்டிட்ட புன்னை’ எனத் தொடங்கும்
இந்நற்பதிகத்தைப் பாடினார். அக்குடத்துள் இருந்த எலும்பு
பெண்ணுருவாயிற்று. ஆதலின், ‘இத்திருப்பதிகம்’ பூம்பாவைப் பாட்டு’
எனப்பெற்றது.

பூம்பாவைத் திருப்பதிகம்.

பண்: சீகாரம்

ப.தொ.எண்: 183   பதிக எண்: 47

திருச்சிற்றம்பலம்

1971.



மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.  1


     1. பொ-ரை: பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்
சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள
கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது
நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில்
அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது
முறையோ?

     கு-ரை:மட்டு-கள். கானல்-கடற்கரைச்சோலை. மடமயிலைக் கட்டு-இளமயில்கள் ஆர்ப்பு மிக்க ஊரில் உள்ள திருக்கோயில்.
மயிலார்ப்பூர் என்பதன் மரூஉ மயிலாப்பூர். இட்டம்-திருவுள்ளத்தன்பு.
(இஷ்டம்) ஊர் மயிலை, மயிலாப்பூர், கோயில்