பக்கம் எண் :

636

53. திருப்புறவார்பனங்காட்டூர்

பதிக வரலாறு:

     ஆளுடைய பிள்ளையார் திருவரசிலியில் பரசிவனை வணங்கிப் பரசி,
திருப்புறவார் பனங்காட்டூரை அணைந்து நறவார் கொன்றைச் சடைமுடியன்
அடிமலரைப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: சீகாமரம்

ப.தொ.எண்: 189                             பதிக எண்: 53

திருச்சிற்றம்பலம்

2037.







விண்ண மர்ந்தன மும்ம தில்களை
       வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர்
       புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
       பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே
       கலந்தார்க் கருளாயே.            1


     1. பொ-ரை: வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக்
கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த
பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார்பனங்காட்டூரில் உமையொருபாகனாக
வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே!
உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.

     கு-ரை: விண் அமர்ந்தன-ஆகாயத்தில் பொருந்தியனவாகிய.
பிஞ்ஞகா-சடைமுடியனே.

     பிறைசேர் நுதலிடைக்கண்-‘பிறைநுதல் வண்ணம் ஆகின்று’ (புறம்,
கடவுள் வாழ்த்து.) நுதல்; நெற்றி+சென்னி இரண்டையும் குறித்து ஆளப்படும்.
யோகமார்க்கத்தில் பிறை விளங்கும் இடம் நுதல் ஆதலைக் குறித்ததுமாம்.