பக்கம் எண் :

759

68. திருக்கடம்பூர்

பதிக வரலாறு:

     வாழ்கொளிபுத்தூரில் வழிபட்டுவந்த திருஞானசம்பந்தர் பார்புகழ்
பதிகங்கள்பாடி வார்பொழிற் கடம்பையும் வணங்கி மகிழ்ந்தபொழுது
அருளியது இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 204   பதிக எண்: 68

திருச்சிற்றம்பலம்

2200.







வானமர் திங்களு நீரு
     மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத்
     தேவர் தொழப்படு வானைக்
கானம ரும்பிணை புல்கிக்
     கலைபயி லுங்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத்
     தாள்தொழ வீடெளி தாமே.           1



      1. பொ-ரை: வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய
நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச்
சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத்
தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும்
ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.

      கு-ரை: வான் - ஆகாயத்தில். அமர் - பொருந்திய. திங்களும்
-பிறையும். நீரும் - கங்கையும். மருவிய - கலந்த. வார் - நீண்ட. தேவர்
தொழப்படுவானை:- ‘தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத்
தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன்
தொண்டரையே’ (தி.4 ப.112 பா.5). என்றவாறு, தன் அடியாரை யும் தேவர்
தொழுவர் எனின், தன் (பரமசிவ)னைத் தொழுதலில் ஐயமுண்டோ?.
கான்-காடு. பிணை-பெண் மான். கலை-ஆண்மான். கடம்பூர்-கடம்பு மரம்
உள்ளவூர்; தலவிருட்சம். ‘கானமரும் பிணைபுல்கிக் கலைபயிலுங் கடம்பூர்’.
என்றதால் கடப்பங்காடும் ஆகும்.