2213.
|
சடையமர்
கொன்றையி னாருஞ்
சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 3 |
2214.
|
நறைவளர்
கொன்றையி னாரு
ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங்
காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு
மணமுழ வங்குழன் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 4 |
3.
பொ-ரை: பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை
தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை
உடையவர். புள்ளிளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர்.
விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப்
படைக்கலன்களாக உடையவர்.
கு-ரை:
சாந்தம் வெண்நீறு - சாந்தமென நீறணிந்த சைவர்
(தி.2 ப.71 பா.8) புடை - பக்கம். பூதத்தினார் - பூதகணங்களை உடையவர்.
பொறி - புள்ளிகள். கிளர் - விளங்குகின்ற. அசைத்தார் - கட்டியவர்.
விடை - எருது. கொடியார் - துவசம் ஏந்தியவர். இடபத்துவசம்
உயர்த்தியவர். மழுவும் மூவிலைச் சூலப்படையும். அமர் கொள்கையினார் -
விரும்புங் கோட்பாடுடையவர்.
4. பொ-ரை:
பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய
கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க
நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக்
கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல்,
மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர்.
|