பக்கம் எண் :

787

2236.







வாடற் றலைமாலை சூடிப் புலித்தோல்
     வலித்துவீக்கி
ஆடலரவசைத்த வம்மா னிடம்போலும்
     அந்தண்சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து
     பசும்பொனுந்திக்
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற்
     குறும்பலாவே.                   
 3
2237.







பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து
     பாடியாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங்
     கல்சூழ்வெற்பில்
நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டரற்றும்
     நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்ஞை பேடையொ டாட்டயருங்
     குறும்பலாவே.                     4


     3. பொ-ரை: ஊன் வாடிய தலைமாலையைச் சூடிப் புலித்தோலை
உடுத்து ஆடும் பாம்பை அறையில் கட்டிய அம்மானது இடம், அழகிய
குளிர்ந்த சாரலில் பாடும் பெண்வண்டுகள் அரும்புகளைப் போதாக
அலர்த்த மகரந்தப் பொடிகள் பசும்பொன் போல உதிரக் காந்தள்
மலர்ந்து மணம் பரப்பும் குன்றுகள் சூழ்ந்த குறும்பலாவாகும்.

     கு-ரை: வாடல் - வற்றுதல். வலித்து வீக்கி - உறுதியாகக் கட்டி.
அசைத்த - கட்டிய, ஆட்டிய எனலுமாம். போது - மலரும் பருவத்தது.
அலர்த்த - அலரச்செய்ய. கோடல் - வெண்காந்தள்.

     4. பொ-ரை: பால் போன்ற வெண்மையான மதியை முடியிற் சூடி,
ஒருபாகத்தே உமையம்மையைக் கூடிநின்று ஆடிப்பாடி, மார்க்கண்டேயர்
பொருட்டுக்காலனின் உடல் கிழியும் படி அவனைச் சினந்த பெருமானது
இடம், கற்கள் சூழ்ந்த வெற்பிலுள்ள சுனைகளில் கருங்குவளைகள் கண்
போல மலரவும், வண்டுகள் இசைபாடவும் நெடிய குளிர்ந்த சாரலில்
அழகிய மயில்கள் பெண் மயில்களோடு ஆடி மகிழும் குறும்பலாவாகும்.