பக்கம் எண் :

822

76. திருவகத்தியான்பள்ளி

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருமறைக்காட்டினின்றும்
சிவிகைமீதேறி, சிவனடியை முடியிற்கொண்டு வணங்கி அடியவர் கூட்டம்
கடலொலிபோல அரகர முழக்கஞ் செய்யும், மங்கல தூரியம் தழைக்கவும்
மறைமுழங்கவும், சங்க படகம் முதலிய வாத்தியங்கள் எங்கும் இயம்பவும்,
மலர்மாரி பொழியவும், மங்கல வாழ்த்திசைக்கவும், பூரணகும்பம் முதலியவை
பொலியவும், அடியார் எதிர்கொள்ளவும் சென்று, பல தலங்களை வணங்கித்
தெண்டிரை சூழ்கடற் கானற்றிருவகத்தியான்பள்ளியில் அண்டர்பிரான் கழல்
வணங்கிப்பாடிய அருந்தமிழ் மாமறை இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 212                               பதிக எண்: 76

திருச்சிற்றம்பலம்

2291.

வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே.   1



     1. பொ-ரை: தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த
இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு
எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப்
பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

     கு-ரை: வாடிய - வற்றிய. தலைமாலை, ‘தலைமாலை தலைக் கணிந்து’,
மயங்கு இருள் - செறிந்த இருள். கொள்ளி - தீக்கொள்ளி. கொள்ளி
விளக்கொளி செய்ய என்றபடி.

     நிவந்த - உயர்ந்த, வளர்ந்த, அகரம் தொகுத்தல் விகாரம். எரிஆடிய
- தீயில் ஆடிய. ‘அனலாடி’ ‘தீயாடி’ என்பவை சிவ நாமங்கள். பாவம்
இல்லையாம் என்க.