பக்கம் எண் :

843

2322.







உள்ளதன்றனைக் காண்பன்கீ
     ழென்றமாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மே
     லென்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார்
     ஒளியார் தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா
     வொளியார் விளநகர் மேயதே.      10


     9. பொ-ரை: கையில் விளங்கும் சூலத்தை உடையவர். தோலாடை
உடுத்தவரமுற்றழிப்புக் காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர்.
பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையம்மையை இடப்பாகமாக
உடைய பரமர்கரிய ஒளி நிறைந்த குற்றமற்ற நீலமணி போன்ற மிடற்றினை
உடையவர். திருமேனியில் விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்தவர்.
அவ்விறைவர் மேவியிருப்பது விளநகர் ஆகும்.

     கு-ரை: கைஇலங்கிய வேலினார் (பா.4) தோலினார் கரிகாலினார்
என்பது காலினார் கரித்தோலினார் என்றிருந்து பிறழ்ந்தது போலும்.
தோலினார்-யானைத்தோலும் புலித்தோலும் தரித்தவர். கரிகாலினார்-
எல்லாம் வெந்து கரிந்துபோகுஞ் சருவசங்கார காலத்தில் தாம் ஒருவரே
அழியாது நிற்பவர். கரிதல்-‘வெந்து கரியான காமன்’. கால்-காலம். பை-
படம். பின்புறத்தில் இடுப்பிற்கும் புறங் காலிற்கும் இடைப்பகுதி படம்
விரித்த பாம்பின் தோற்றம் இருத்தலால், அல்குலுக்கு அரவு ஒப்பாயிற்று.
அல்குலைக் குறி எனல் குற்றம். திருமுறையில் அஃது ஒவ்வாது.
மெய்-திருமேனி. உண்மையுமாம். ‘உண்மையிலுள்ளது நீறு’, ‘சத்தியமாவது
நீறு’, ‘தத்துவமாவது நீறு’ (பதி. 202).

     10. பொ-ரை: கீழ் உள்ள திருவடியை யான் காண்பேன் என்று
சென்ற கரிய மணிவண்ணனாகிய திருமாலும், மேல் உள்ள திருமுடியை
யான் காண்பேன் என்று சென்ற தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும்
உள்பொருளாய் விளங்கும் சிவபிரானைக் கண்டிலர். ஒளி பொருந்திய
சடைமுடியின் மேல் விளங்கும் பிறை முதலியவற்றை யாரும் காண இயலாத
சோதிப் பிழம்பாய்த் தோன்றும் அப்பெருமானார் தம்மை அன்பர்கள் கண்டு
வழிபட விளநகரில் எழுந்தருளியுள்ளார்.