பக்கம் எண் :

952

கண்ட லங்கழி யோதங்
     கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை
     மாமறைக் காடது தானே.           9
2462.







பெரிய வாகிய குடையும்
     பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக்
     கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது
     மவர்திற மொழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே
     பேணுமின் மனமுடை யீரே.         10


காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி,
தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும்
மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும்
சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும்.

     கு-ரை: விண்ட - (பூத்த) இதழ்கள் விள்ளலுற்ற.

     அரவு-அணை-சர்ப்பசயனம்; பண்டும் என்றதால் இன்றும் காணாமை
எனப் படும். கண்டல்-தாழை, நீர்முள்ளியும் ஆம்.

     10. பொ-ரை: பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க,
கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆரவாரத்துடன்
பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என
ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி, நல்ல மனம் உடையவர்களே! நம்
தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை
வழிபடுவீர்களாக.

     கு-ரை: பெருங்குடையும் மயிற்பீலியும் உடைய அப் புறப்புறச்
சமயத்தவர். மண்டை-உள்கலம். உண்டு-உணவு கொண்டு. ‘உண்டாம்
இல்லையாம்’ என்பன முதலியவை.