பக்கம் எண் :

954

92. திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்

பதிக வரலாறு:

      திருப்புகலூர்த் தொண்டர்களொடும் செம்மை முருகனார்
எதிர்கொள்ள வந்து, வேதமுதல்வர் திருக்கோயிலை எய்திப் புகுந்து
பூமலிமுன்றிற் புடைவலங்கொண்டு ஒருப்படு சிந்தையொடும் அணைந்த
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், பணிந்து சாத்திய தமிழ்த்தொடை
மாலை இத்திருப்பதிகம்.

                   பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 228   பதிக எண்: 92

திருச்சிற்றம்பலம்

2464.







பட்டம் பால்நிற மதியம்
     படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும்
     நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொ டாடும்
     பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும்
     வர்த்தமா னீச்சரத் தாரே.          1



     1. பொ-ரை: ஆண் பறவைகள் தன்பிணையோடு கூடி மகிழும்
அழகிய புகலூரில் அடியவர்கள் வட்டமாகச் சூழ்ந்து திருவடிகளைப்
போற்றிப் பரவும் வர்த்தமானீச்சரத்து இறைவர் திருமேனிமேல் உத்தரீயமும்
விரிந்த சடைமேல் வெண்மதி ஒளிதரும் கங்கை ஆகியவற்றையும் கொண்டு
நள்ளிருளில் நட்டமாடும் தலைவர் ஆவார். அவர் கோயில்
திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ஆகும்.

     கு-ரை: பட்டம்-உத்தரீயம். பாணி-கங்கை. ‘பாணி மூவுலகும் புதைய
மேல்மிதந்த’ தோணிபுரத்துறைந்தனை’ (தி.1 ப.1 பா.128.) ‘விண்ணியல்
பாணியன்’ (பொன்வண். 30). ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்’.
புள்-பறவை. பேடை-பெண்பறவை.