பக்கம் எண் :

968

94. திருவாழ்கொளிபுத்தூர்

பதிக வரலாறு:

    காழிவேந்தர், திருப்பந்தணைநல்லூரையும், திருவோமாம் புலியூரிலுள்ள
வடதளியையும் வழிபட்டு, ‘அலர்ந்த செந்தமிழ்ச் சொற்றொடை’ பாடி, பிரியா
விடைபெற்று, மதில் சூழ்ந்த பொற்பதியாகிய வாழ்கொளிபுத்தூர் அடைந்து
போற்றிப் புனைந்தவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

                  பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 230   பதிக எண்: 94

                     திருச்சிற்றம்பலம்

2486.







சாகை யாயிர முடையார்
     சாமமு மோதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி
     யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய
     துடியிடை பாகமு முடையார்
வாகை நுண்டுளி வீசும்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.          1


     1. பொ-ரை: வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ்கொளிபுத்தூர்
இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர். சாமகானம்
பாடுபவர். கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள்
கொள்பவர். மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர்.

     கு-ரை: சாகை-வேதநூற்பிரிவு, சாமம்-சாமவேதம், ஈகை-
வினைத்தொகை. வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல்
போற்றி, (திருவாசகம். 73).

     ‘இட்டும் அட்டியும் ஈ தொழில் பேணில் என்? (தி.5 ப.99 பா.3)
என்பவற்றில் உள்ள வினைத்தொகையை நோக்குக.