பக்கம் எண் :

971

2490. பரவு வாரையு முடையார்
     பழித்திகழ் வாரையு முடையார்
விரவு வாரையு முடையார்
     வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பது முடையார்
     ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமு மாயிர முடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.        5
   
2491. தண்டுந் தாளமுங் குழலுந்
     தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமு முடையார்
     கோலமும் பலபலவுடையார்
கண்டு கோடலு மரியார்
     காட்சியு மரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி யுடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே         6


     5. பொ-ரை: வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து
இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர். தம்மோடு அன்பு கலந்து
ஒன்றாகுபவரையும் உடையவர். பிரமனது வெள்ளிய தலையோட்டில்
பலிகொள்பவர். அரவம் பூண்டவர். ஆயிரம் பேருடையவர். வரங்கள் பல
அருள்பவர்.

     கு-ரை: விரவுவார்:- மெய்யன்புடைய அடியார் ‘பரவுவார்
இமையோர்கள்... விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்’ திருவாசகம். 21.
விரவுதல். ‘கலந்துநின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன்’
(திருவாசகம்.485) ‘எனைக்கலந்து’ (84) ‘கருணையினால் கலந்து
ஆண்டுகொண்ட விடையவனே’ (105).

     6. பொ-ரை: கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய
பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு, தாளம், குழல், தண்ணுமை
ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்.
பல்வேறு கோலங்கள் கொண்டவர். காணுதற்கும் காட்சிக்கும் அரியவர்.