பக்கம் எண் :

974

2495. மண்டை கொண்டுழல் தேரர்
     மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக்
     கொள்ளன்மின்திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச்
     சுண்ணவெண்பொடியணிந்தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த
     வாழ்கொளி புத்தூ ருளாரே.        10
   
2496.

நலங்கொள் பூம்பொழிற் காழி
     நற்றமிழ் ஞானசம் பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன்
     வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை
     ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி
     நன்னெறி யெய்துவர் தாமே.         11

                     
                    திருச்சிற்றம்பலம்


      10. பொ-ரை: மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும்
தேரர், அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும்
பேச்சுக்களைக் கொள்ளாதீர். ஒளிமிக்க பிறை சூடி, திருநீற்றுப் பொடி
பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப்
போற்றுவீராக.

      கு-ரை: பிறைக்கு அடை திகழொளியும் நன்மையும் துண்டமும்,
வெண்மையும், சுண்ணப்பொடி என்பதினும் சுண்ணமும் பொடியும் எனல்
சிறந்தது. சுண்ணம்:- திருப்பொற் சுண்ணம்.

      11. பொ-ரை: நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில்
தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண்மழுவை ஏந்தி
விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை
ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் நலந்தரும் சிந்தையராய்
நன்னெறி எய்துவர்.

      கு-ரை: நலம்-குறைவிலாமங்கலம். நன்னெறி சரியையாதியின்
பயனாகிய ஞானம்.