பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)81. திருத் தோணிபுரம்1013

திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக்
கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று, அதனை இசையுடன் ஓதும்
அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும்
இல்லாதவர்கள். அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப்
பெற்று, இறைவனது அருள்பெற்றுச் சீலத்துடன் வளர்வர்.

     கு-ரை: துஞ்சு - உலகெலாம் ஒடுங்கிய. இருளில் பிரளயகால இருளில்.
(நின்று) நடம் ஆடி - நடம் ஆடிய பெருமானும். மிகு - புகழால் மிகுந்த,
தோணிபுரம் மே(வி)ய. மஞ்சனை - சிவபெருமானை. மாலையே நமது
பற்றுக்கோடாகும் என்று, நின்று இசைமொழிந்த அடியார்கள். தடுமாற்றம்,
வஞ்சம், இலர் - நெறி தவறுதலும், அதற்குக் காரணமாகிய மாயையும்
இலராவார். இருளாவது தன்னைக் காட்டிப் பிறபொருளைக்
காட்டாமலிருக்கும்; இது தன்னையும், தான்மறைத்த ஆன்மாவையும்
காட்டாமையால் வஞ்சம் எனப்பட்டது. இருளும் - ஆணவமலமும்,
மாயையும் இலர் எனவே. ஏனைய கன்மமும் தொலையப்பெற்று, அருள்
பெற்று, வளர்வார் என்க.

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கி அமண்
கணங்கழு ஏற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ் செலுத்தின வெண்பிறையோ
டிணங்கிய மாடச் சிரபுரத் தான்றன் இருந்தமிழே.

இருந்தண் புகலிகோ லக்கா எழிலா வடுதுறைசீர்
பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன் பொன்சிவிகை
அருந்திட வொத்தமுதத் தீச்செய ஏற அரனளித்த
பெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே.

                                -நம்பியாண்டார் நம்பி.