பக்கம் எண் :

1170திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

101.திருஇராமேச்சுரம்

பதிக வரலாறு:

     சேதுவில் செங்கண்மால் பூசித்த சிவபெருமானைப் பாடிப் பணிந்தது
நாடோறும் வணங்கியேத்திய திருஞான சம்பந்தர், கோதில்புகழ்ப்
பாண்டிமாதேவியாரும் மெய்க்குலச் சிறையாரும் போற்றிக் கேட்கப்
பாடியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம்.

பண்:பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்:359 பதிக எண்:101

திருச்சிற்றம்பலம்

3879. திரிதரு மாமணி நாகமாடத்
       திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க வெரியேந்தி யாடு
     நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்த மிலங்குகான
     லிராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி
     விமலர் செயுஞசெயலே.                 1


     1.பொ-ரை: அரிய மாணிக்கங்களையுடைய நாகங்களைப் படமெடுத்து
ஆடுமாறு தம் உடலில் அணிந்துள்ளவர் சிவபெருமான். அவர் மகாசங்கார
காலத்தில் நரிகள் ஊளையிடும் சுடுகாட்டில் நெருப்பெந்தி நடனம் செய்வார்.
மிக்க ஒளியுடைய முத்துக்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த இராமேச்சுரம்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிந்தருளுகின்ற, ஒளிக்கதிர் வீசும்
வெண்மையான பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்த, இயர்பாகவே
பாசங்களின் நீங்கியவரான சிவபெருமானின் அச்செயல், உயிர்கள்
இளைப்பாறும் பொருட்டுச் செய்யப்படும் அருட்செயல் என்பதை
உணர்ந்தவர்களே மெய்ஞ்ஞானிகள் ஆவர்.

     கு-ரை:திரிதரு - திரிகின்ற நாகம். திறைத்து - அணிந்து. தீ
அழல்வாய் - கொடிய நெருப்பில் நின்று. (நரி) கதிக்க - பாட. கதித்தல் -
சொல்லல், இங்குப் பாடுதல் என்னும் பொருளில் வந்தது. மயானம் ஆதலில்
நரி கூவியது பாடல் தோன்றியது, எரி ஏந்தி ஆடும்