பக்கம் எண் :

1250திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3988. விச்சையொன்றிலாச் சமணர்சாக்கியப்
       பிச்சர்தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர்
     குணங்கள் கூறுமினே.                 11

3989. கழுமலத்தினுட் கடவுள்பாதமே
       கருதுஞானசம் பந்தனின்தமிழ்
முழுதும்வல்லவர்க் கின்பமேதரு
     முக்கணெம் மிறையே.                 12

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர், புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள்.

     கு-ரை: விச்சை யொன்று இலா - மெய்யுணர்வு வரும் கல்வியறிவு ஒரு சிறிதுமில்லாத. பிச்சர் பித்தர் என்பதன் போலி. கரிசு அறுத்தவன் - தீமையாகிய வேரையறுத்தவன், அன்பு செய்பவர் குணங்கள் கூறுமின்! “நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” (மூதுரை.8.)

     12. பொ-ரை: திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான்.

     கு-ரை: திருக்கழுமலத்துள் கடவுள் பாதத்தைக் கருதிய ஞானசம்பந்தனின் தமிழ் வல்லவர்க்கு முக்கண் எம்மிறை இன்பமே தரும் என்பது இப்பாட்டின் பொருள்கோள்.