பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)111. திருவீழிமிழலை1251

111. திரு வீழிமிழலை

பதிக வரலாறு:

           சிரபுரத்து அந்தணர் மீண்டு சென்ற பின்பு, கவுணியப் பிள்ளையார்,
ஓங்கிய திருநாவுக்கரசரோடும் விரவிப் பெருகிய நண்புகூர மேவி இனிது
உறையும் நாளில் பரவிப் பணிந்து சாத்திய தமிழ்த் தொடைமாலை இத்
திருப்பதிகம்.

ஈரடி
பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்: 369 பதிகஎண்: 111

 திருச்சிற்றம்பலம்

3990. வேலினேர்தரு கண்ணினாளுமை
       பங்கனங்கணன் மிழலைமாநகர்
ஆலநீழலின் மேவினானடிக்
     கன்பர்துன் பிலரே.                    1

3991. விளங்குநான்மறை வல்லவேதியர்
       மல்குசீர்வளர் மிழலையானடி
உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை
     யொல்லை யாசறுமே.                   2


     1. பொ-ரை: வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய கண்களை
உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அழகிய
கண்களையுடைய சிவபெருமான். அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில்
வீற்றிருந்தருளுகின்றார். ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர்.
அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம்
இல்லை.

     கு-ரை: வேலின் நேர்தரு - வேலை ஒத்த.

     2. பொ-ரை: நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள்
வசிக்கின்ற, புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள்,
அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில்
நீங்கும்.