பக்கம் எண் :

1252திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3992. விசையினோடெழு பசையுநஞ்சினை
       யசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான்
     மிசைசெயா வினையே.                 3

3993. வென்றிசேர்கொடி மூடுமாமதிண்
       மிழலைமாநகர் மேவிநாடொறும்
நின்றவாதிதன் னடிநினைப்பவர்
     துன்பமொன் றிலரே.                  4


     கு-ரை: நான் மறை வல்ல வேதியர் மல்குசீர் வளர்மிழலை என்பது
தில்லை மூவாயிரம்; திருவீழிமிழலை ஐந்நூறு; என்னும் பழமொழிப்படி
அந்தணர்கள் மிகுதியைக் குறித்ததாம். ‘ஐந்நூற்று அந்தணர் ஏத்தும்
எண்ணில் பல்கோடி குணத்தர் ஏர்வீழி, இவர் நம்மை ஆளுடையாரே’ (தி.9
திருவிசைப்பா.54) என்று சேந்தனார் கூறுவதுங் கொள்க. வினை ஆசு அறும்
- வினை பற்று அற நீங்கும்.

     3. பொ-ரை: வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை
உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும்
அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது.

     கு-ரை: விசையினொடு எழு - வேகமாகப் பரவிய. பசையும் நஞ்சினை
- பற்றிக் கொல்லும் விடத்தை. அசைவு செய்தவன் - உண்டவன். நசையின்
மேவினால் - விருப்பத்தோடு அடைந்தால். மிசை - மிகை; தீங்கு.

     4. பொ-ரை: சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை
மூடும்படி விளங்கும், உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழிலை
என்னும் மாநகர். அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும்
சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத்
துன்பம் சிறிதும் இல்லை.

     கு-ரை: வென்றிசேர் கொடி - வெற்றியினால் எடுத்த கொடிகள். மூடும்
- வானை மூடுகின்ற. மாமதில் - உயர்ந்த மதிலையுடைய. நாடொறும் நின்ற
- என்றும் நிலைபெற்று நின்ற. ஒன்று - ஒரு சிறிதும்.