பக்கம் எண் :

16ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

     விரைவில் விடுவிப்பது கருதியே “திருவாரூருக்கு நம்பால் வருக”
எனத் தியாகேசர் அழைத்தார் போலும்.

     நடராஜ மூர்த்தியும், சத்து - உள்ளது. சித்து - அறிவு. ஆட்டம் -
ஆனந்தமாய் உள்ளவர்.

     தியாகராஜ மூர்த்தியும் சத்து சித்து ஆனந்தமாய் உள்ளவரே.

     இருப்பினும், நடராஜமூர்த்தி உலக போகங்களை உயிர்கட்கு அருத்தி
பக்குவப்படுத்துபவராகவும், தியாகராஜ மூர்த்தி உலக போகங்களைத் துய்த்து
உவர்ப்புத் தோன்றிய முத்தான்மாக்களை - பக்குவப்பட்ட உயிர்களை -
ஈடேற்றம் செய்பவராகவும் கொள்ளலாம்.

     சுந்தரர் யோகநெறி விளக்க வந்தவர் என்ற குறிப்பும், திருவாரூர்
மூலாதார க்ஷேத்திரம் என்ற குறிப்பும், அருணகிரி நாதரின் ஆதாரத்
தொளியானே, ஆரூரிற் பெருமாளே என்ற குறிப்பும், ‘உயிராவண மிருந்து
உற்று நோக்கி, உள்ளக் கிழியின் உரு எழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு
உன் கைத்தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி, அயிராவணம் ஏறாது
ஆன் ஏறேறி, அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட, அயிர் ஆம் வண்ணமே
என் அம்மானே, நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே’ என்ற
அப்பர் குறிப்பும் இக்கருத்தை ஓராற்றால் புலப்படுத்துவது காணலாம்.

ஆசை தீரக் கொடுப்பார்:

     மேலும் இரண்டாம் திருமுறையில் உள்ள திருக்கடவூர் மயானத்து
“வரிய மறையார்” எனத் தொடங்கும் திருப்பதிகத்துள்,

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே

                                    (தி,2 ப,80 பா,7)

     என்ற பாடல், பெத்தான்மாக்களுக்குள்ள ஆசைகள் தீருமாறு போகப்
பொருளைப் பலகாலும் கொடுத்து, அவர்களது ஆசைகள் தீருமாறு செய்வது
ஊன நடனம் செய்யும் பேருதவி.

     பாசமான களைதலும், பரிவார்க்கு ஆரா அமுதாய்