பக்கம் எண் :

28ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

பிராரத்த வினையை அநுபவித்தே ஆகவேண்டும் என்னும் போது அதனை
வழிபாட்டினால் நீக்கிவிடலாம் என்பது சரியாகுமா? என்பது கேள்வி.
இதற்குத் தேவாரப் பாடல்களைச் சிந்தித்தால் தெளிவான விடை கிடைக்கும்.

     ஒருவனைக் கொலை செய்தவன் என்று நிருபித்துவிட்டால் அவனுக்குத்
தூக்கு தண்டனைதான் விதிக்கவேண்டும். கொலை செய்தவன் குற்றத்தை
உணர்ந்து திருந்துவான் எனத்தோன்றினால் அவன் இதுவரை அநுபவித்த
இன்னல்களை வைத்தே அவனுக்குத் தூக்கு தண்டனைக்குப் பதிலாக ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டுகிறது.

     ஒருவன் கடன் வாங்குகிறான். திரும்பக் கொடுக்க இயலவில்லை.
அவனுக்குத் தண்டனையாகக் கடன் கொடுத்தவருக்குக் கடன் வாங்கியவன்
சில மாதங்கள் அல்லது வருடங்கள் வேலை செய்து கடனைக்
கழித்துவிடுகிறான். பணமாகக் கொடுக்கவில்லை என்றாலும் உழைப்பால்
கடனைக் கொடுத்து விடுகிறான். கடன் தீர்ந்துவிட்டதால் தண்டனை
இல்லை. உழைப்பே அநுபவமாகி விடுகிறது.

     இதுபோல் அனைத்துலகிற்கும் முதல்வனாகிய கடவுளை நாளும்
வழிபட்டால் வழிபாடே வினையைத் தீர்க்கும் பணியாக, உழைப்பாக, நின்று
நாம் செய்த பாவத்தை நீக்கிவிடுகிறது. வினையினின்றும் நீங்கியவனின்
எண்ணங்களும், பேச்சுக்களும் செயல்களும் முன்னிலும் உயர்ந்ததாய்
விளங்குகின்றன. இதனை உணர்ந்தே நமது சமயாசாரியர்கள்
இறைவழிபாட்டால் வினையை வீட்டலாம் என்றனர். இக்கருத்தை
ஞானசம்பந்தர்,

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர், பரிவிலார்பால்
கரவினர், கனலன உருவினர்..........

                             
    (தி.3.ப.99பா.3)

என அறிவிக்கிறார்.

     பரவினர்க்குப் படுதுயர் கெடுப்பவர் என்றவர், பரிவிலார்பால் பரமன்
மறைந்து விடுகிறான் என்கிறார். அவருக்கு வழிபடும் எண்ணம்
தோன்றவில்லை. தோன்றும் அளவும் மறைந்திருந்து தோன்றியபோது, அவர்
தீவினையையும் அகற்றி விடுவார். இதே கருத்தைத் தென்குரங்காடுதுறைத்
தேவாரத்தில் இரண்டாம் திருமுறையில் அருள்வதும் காண்க.