பக்கம் எண் :

36ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

     “திறன் அறிந்து தீதின்றி வந்த பொருளே அறம் செய்ய ஏற்றது”
என்றார். மேலும் “சலத்தால் பொருள் செய்து ஏம் ஆர்த்தல் பசுமட்கலத்துள்
நீர் பெய்து இரீஇயற்று” என்றும் கூறியுள்ளார். இக்கருத்தை ஞானசம்பந்தர்,
ஓமாம்புலியூர் பதிகத்தில் தெளிவு செய்கிறார்.

............
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
     தன்மையார், நன்மையான் மிக்க
உலப்பில் பல்புகழார் ஓமமாம் புலியூர்
     உடையவர் வடதளி அதுவே

                                (தி.3ப.122பா.5)

     சலம்-பாவம். பாவத்தால் பொருள் ஈட்டிப் பெருமை அடைய
விரும்பாத நன்மைமிக்கவர் வாழும் ஊர் ஓமாம்புலியூர் என அறிவிக்கின்றார்.

நல்லிசையாளன்:

     இசை நல்லிசை, வல்லிசை, மெல்லிசை, இன்னிசை எனப்பாடுவோர்
மனப் பண்பிற்கேற்பப் பலதிறப்படுகிறது. நல்லிசையே இருமைக்கும் பயன்
தருவது. இன்னிசையும் இதுவே இவ்வரிசையில் ஞானசம்பந்தர்
நல்லிசையாளர். அதுமட்டுமல்ல புல்லிசை கேளாதவர். இதனை அவரே
பந்தணைநல்லூர் திருப்பதிகப் பாடல் ஒன்றில் “நல்லிசையாளன் புல்லிசை
கேளா நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்றருளுகிறார்.

     புல்லிசையே இக்காலத்தில் மெல்லிசை எனப்படுகிறது. இசையை
ஆள்பவர் இசையாளர். அதிலும் நல்லிசையாளர். இது ஞானசம்பந்தரே
கூறிய அகச்சான்று.

     மேலும் சுந்தரர், இவரை நல்லிசை ஞானசம்பந்தர் என்று
போற்றியுள்ளார். நல்லிசை என்பது பாடலின் பொருள் புரியுமாறும்,
கேட்போர் உளங்கொள்ளுமாறும் பண் அமைத்துப் பாடுவதேயாம்.
இதனையே சேக்கிழார் பெருமானும், “பண்ணின் பயனாம் நல்லிசையும்”
என்று குறிப்பிடுகின்றார். “பண் ஒன்ற இசைபாடும் அடியார்கள்” என்று
சம்பந்தரும், “பண் பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பனை” என்று
அப்பரும் பாடியுள்ளனர். அப்பர் கூற்றால் பழனப் பெருமானே
பண்பொருந்த இசைபாடியுள்ளார்