பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)19. திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்535

3007. வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
  மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.     10

3008. அழகரை யடிகளை அம்பர் மேவிய
  நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.    11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: மழித்த தலையையும், முடி பறித்த தலையையும் உடைய
புத்தர்களும், சமணர்களும் கட்டுரையாகக் கூறியவற்றைப் பயனுடையவெனக்
கொள்ள வேண்டா. கங்கையைச் சடையிலே தாங்கி, அங்குமிங்கும் சுற்றித்
திரிதலை ஒழித்து, அம்பர் மாநகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இறைவனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள்.

     கு-ரை: வழிதலையவர் - மழித்த தலையை யுடையவர்கள் - புத்தர்.
பறிதலையவர்கள் - மழித்தலால், மீளவும் முளைத்திடுமென்று பிடுங்கி
விடப்படுதலால் ‘பறிதலையவர்’ எனப்பட்டனர்; சமணர் மொழியல் என்றதற்கு
மொழியா தொழிதல் பொருளாகக் கொள்க. ஒருமை பன்மை மயக்கம்.
அழிதலை பொருபுனல் அம்பர் - அங்கும் இங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து,
அம்பர் மாநகரில் உமையும் தாமுமாக. உளர் - இருப்பர். அவரை வணங்கிப்
பயனெய்த வம்மின் என்பது.

     11. பொ-ரை: அழகரை, அடிகளை, திரு அம்பர் மாநகரில்
எழுந்தருளியிருக்கும் ஒளிர்கின்ற சடைமுடியுடைய நீலகண்டரான
சிவபெருமானை, அலைவீசுகின்ற கடலுடைய இவ்வுலகினில், முத்தமிழ்
விரகனாகிய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையாகிய
திருப்பதிகத்தை ஓதிச் சிவகதி பெறுமின்.

     கு-ரை: நிழல் - ஒளி. உமிழ்திரை - வீசுகின்ற அலைகளையுடைய
கடல். தமிழ்கெழுவிரகினன் - முத்தமிழ் விரகனாகிய நான் தமிழாற்
பாடப்பட்ட மாலையாகிய இப்பதிகத்தை. ஓதுவீர் - சிவபெருமானைப்
பாடுவீர்! இப்பாடல்களைக் கொள்ளுங்கள்! இப்பாடல் குறில் வருக்க
எதுகை. முதல் ஏழு பாசுரங்களிலும் ஆடுவர் என்றே கடவுளைப் பற்றிக்
கூறப்படுகிறது.