பக்கம் எண் :

570திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3064. வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
  ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.     2

3065. மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
  வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.     3


     2. பொ-ரை: தேவர்கட்கெல்லாம் தேவனாக, தீமையில்லாத திருந்து
தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவபெருமானின்
சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன.
தீவினைகளைப் போக்குவன. கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின்
நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன.

     கு-ரை: வீதிபோக்கு ஆவன-திருவீதி வலம் வருங்கால்
அணிவதற்குரிய அணிகலன்களாக அணிசெய்வன.

     போக்கு-போதல். இங்கு ஆகுபெயர்ப் பொருளை உணர்த்திற்று. ஒரு
நூலைப் படித்துப் பொருள் விளங்காதிருக்கும்பொழுது இவ்வேடத்தை
நினைத்தால் அப்பொருள் தெள்ளிதில் விளங்கும்.

     3. பொ-ரை: தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும் விளங்கும்
திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், பசுவிலிருந்து பெறப்படும்
பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவபெருமானின் சிவவேடங்கள்,
மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான
அஞ்ஞானமான மாசினை நீக்குவன. முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன.

     கு-ரை: மாசு நீக்குவன - மனத்துக்கண் மாசை நீக்குவன. வான் -
வெளி -இன்பவெளி. உள்க - நினைக்க. ஆன் அஞ்சு - பஞ்சகவ்வியம்;
அபிக்ஷேகத்திரவியங்களில் ஒன்று. "ஆனைந்தும் ஆடினான்காண்" என்பது
அப்பர் திருவாக்கு.