3064. |
வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன |
|
ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே. 2 |
3065. |
மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன |
|
வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே. 3 |
2.
பொ-ரை: தேவர்கட்கெல்லாம் தேவனாக, தீமையில்லாத திருந்து
தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவபெருமானின்
சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன.
தீவினைகளைப் போக்குவன. கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின்
நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன.
கு-ரை:
வீதிபோக்கு ஆவன-திருவீதி வலம் வருங்கால்
அணிவதற்குரிய அணிகலன்களாக அணிசெய்வன.
போக்கு-போதல்.
இங்கு ஆகுபெயர்ப் பொருளை உணர்த்திற்று. ஒரு
நூலைப் படித்துப் பொருள் விளங்காதிருக்கும்பொழுது இவ்வேடத்தை
நினைத்தால் அப்பொருள் தெள்ளிதில் விளங்கும்.
3.
பொ-ரை: தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும் விளங்கும்
திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், பசுவிலிருந்து பெறப்படும்
பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவபெருமானின் சிவவேடங்கள்,
மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான
அஞ்ஞானமான மாசினை நீக்குவன. முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன.
கு-ரை:
மாசு நீக்குவன - மனத்துக்கண் மாசை நீக்குவன. வான் -
வெளி -இன்பவெளி. உள்க - நினைக்க. ஆன் அஞ்சு - பஞ்சகவ்வியம்;
அபிக்ஷேகத்திரவியங்களில் ஒன்று. "ஆனைந்தும் ஆடினான்காண்" என்பது
அப்பர் திருவாக்கு.
|