பக்கம் எண் :

572திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3069. கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்
  குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.   7


ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை
நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப்
பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க. அவர்கள் உயர்வு வாயினால்
சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக.

     கு-ரை: தற்போது இவ்வேடம் அணிந்திருப்போர் முன் பழிபாவங்கட்கு
ஆளாயினோர் என்று எள்ளற்க. உயர்வு என்று வாயினும் சொல்ல முடியாத
அவ்வளவு புகழைத் தருவதாகக் கருதுக என்பது முதல் இரண்டடியின்
கருத்து.

     "எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால்
உள்கி உவந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி... ஈசன்
திறமேபேணித் தொழு மடியார்" என்னும் அப்பர் அருண்மொழிகளால்
இதனை உணர்க.

     7. பொ-ரை: அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து தேவன்குடியில்
இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின்
திருவேடங்கள் முழுதும் குணமேயாகும். குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும்
இல்லை. அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச்
சொல்பவர்களின் குறைகள் நீங்கும். அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு
வாழ்வர்.

     கு-ரை: கரைதல்-குற்றமாகச் சொல்லுதல், ஒன்றும் இல்லை. (ஒரு
பொருளென்றால் குணம் குற்றம் இரண்டும் கலந்திருக்கும். இவ்வேடத்தில்
முழுதும் குணமேயன்றி, குற்றமென்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை)
என்பதாம்.

     உரையில் ஊனம் இலை-இதன் பெருமையைச் சொன்னால் நமக்குள்ள
குறைகள் நீங்கும்(உரை+கு+இல்)=உரைக்கில் என்பதின் 'கு'ச்சாரியையின்றி
வந்த செயின் என்னும் வினையெச்சம்.