பக்கம் எண் :

740திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3356. ஆதியந்த மாயினா யாலவாயி லண்ணலே
  சோதியந்த மாயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால்
ஓதிவந்த வாய்மையா லுணர்ந்துரைக்க லாகுமே.      7

3357. கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
  துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.     8


     7. பொ-ரை: உலகத் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் நிமித்த
காரணராய் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே!
பேரொளிப் பிழம்பாக விளங்குபவரே! பெருஞ்சோதிக்குள் சோதியாய்
ஒளிர்பவர் நீர். உபதேச வழியாகச் சிவஞானம் பெற்ற பக்குவமுடைய
ஆன்மாக்களுக்கு அல்லாமல் ஏனைய அபரஞானமாகிய கல்வி
அறிவுடையோர்க்கு உம் அருட்பண்பை உணர்தற்கும், உரைப்பதற்கும்
இயலுமோ?

     கு-ரை: சோதி அந்தம் - ஒளியின் முடிவு. கீதம்வந்த - உபதேசம்
வழியாய்ப்பெற்ற. வாய்மையால் - சிவஞானத்தால். கிளர் - விளங்குகின்ற.
தருக்கினார்க்கு - பக்குவ ஆன்மாக்களுக்கு.

     அ(ல்)லால் - (கேட்டுச் சிந்தித்தவருக்கு அல்லாமல்) ஓதி
வந்த வாய்மையால் - கற்று அறிந்த அபர ஞானத்தால். உணர்ந்து
உரைக்கலாகுமே?

     8. பொ-ரை: விடக்கறை விளங்கும் கழுத்தை உடையவரே! கரிய
கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனின் தோள்கள் நொறுங்கும்படி
திருக்கயிலைமலையில் காற்பெருவிரலை ஊன்றியவரே! வேதங்களிலுள்ள
பாடல்களால் போற்றப்படுபவரே! மதுரையிலுள்ள திருஆலவாயில்
வீற்றிருந்தருளுபவரே! மனத்தை ஒரு வழியே நிறுத்தி உம்மை நினைப்பதே
உய்தற்குரிய நியமமாகும்.

     கு-ரை: கறை - விஷத்தின் கறுப்பு. கருத்திலாமை மன்னனைச்
சார்வது. நிறை - (புலன்வழியோடாது) நிறுத்தல்.