பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)70. திருமயிலாடுதுறை889

70. திருமயிலாடுதுறை

பதிக வரலாறு:

     புகலியர் தலைவர் மயிலாடுதுறையினில் வந்தார். செல்வவேதியர்
தொண்டரோடு எதிர்கொண்டனர். திருக்கோயிலில் புகுந்து இறைஞ்சி
எல்லையில்லதோர் இன்பம் முன் பெருக எழுந்தார். உணர்வு உறும்
பரிவுகொண்டு உருகி வெள்ளம் தாங்கிய சடையரைத் தெள்ளும்
இன்னிசைத் திளைப்பு அளிக்கப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

திருவிராகம்
பண்:சாதாரி

ப.தொ.எண்:328   பதிக எண்: 70

திருச்சிற்றம்பலம்

3548. ஏனவெயி றாடரவொ டென்புவரி
       யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய
     படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின்
     மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
     மூசுமயி லாடுதுறையே.     1


     1.பொ - ரை: சிவபெருமான் பன்றியின் கொம்பும், படமெடுத்து
ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து,
இளைஞராய், காட்டில் வாழும், வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக
உடுத்தவர், படர்ந்து விரிந்த சடையுடைய அச்சிவ பெருமானைக் கண்டு
தரிசிப்பதற்குரிய இடம், புகழ்மிக்க அந்தணர்கள் வளர்க்கும்
வேள்வியிலிருந்து எழும்புகை, அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை
மீது அழுக்குப்படப் படியும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஏன எயிறு - பன்றியின் கொம்பும். வரி - வரிகளையுடைய.
ஆமை-