கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறும், ஐந்தாம் பாடலில் திருமாலுக்குச் சக்கரப் படையளித்த வரலாறும், ஆறாம் பாடலில் சாக்கிய நாயனார் வரலாற்றுடன் கொல்லியாம் பண்ணுகந்த திறமும், ஏழாம் பாடலில் கண்ணப்பர் வரலாறும், எட்டாம் பாடலில் மகாபலிச்சக்கரவர்த்திக்குஅருள்செய்த வரலாறும், ஒன்பதாம் பாடலில் கணம்புல்லநாயனார்க்கு அருள்செய்த வரலாற்றுடன் அன்புடைத்தொண்டர்கட்குத்தமது எண்குணங்களையும் கொடுப்பர் என்ற கருத்தும்,பத்தாம் பாடலில் இராவணனுக்குக் கொற்றவாளும் நாளும்கொடுத்த வரலாறும் குறிக்கப்படுகின்றன. பத்துபுராண வரலாறுகளைத் தொகுத்து, பத்துப்பாடல்களிலும்கூறியுள்ள சிறப்பு வேறு இடங்களில் காணப்பெறாதது. தோன்றினார்தோன்றினாரே: அம்மையப்பராகிய சிவபெருமானைத் தொழுதலும் வலம் செய்தலுமாகிய செயல்களைச் செய்தவர்களே தோன்றியவராவர். அஃதாவது பிறந்தவர் ஆவார். பிறந்ததன் பயனை அடைந்தவராவார். அல்லாதார் பிறந்தும் பிறவியின் பயனைப் பெறாமையால் பிறந்தவராகார். தோன்றியவராகார். இதே கருத்தை சுந்தரர் தம் வாழ்வில் வைத்துக்குறிப்பிடுகிறார். “மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப் | பாத மேமனம் பாவித்தேன் | பெற்றலும்பிறந் தேன்இனிப்பிற | வாத தன்மைவந் தெய்தினேன்....” | -தி.7 ப.48 பா.1 |
பிறவியின் பயன் இறைவனை நினைத்தலும் தொழுதலுமாம். அந்நிலை பெற்றதனால் பிறந்ததன் பயனாகிய பிறவாத தன்மை வந்தெய்தப்பெற்றேன் என்று துணிவுபடக் கூறுகின்றார். இதனையே திருமூலர், பெறுதற் கரிய பிறவியைப்பெற்றும் | பெறுதற் கரிய பிரான்அடி பேணார் | பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் | பெறுதற் கரிய தோர் பேறிழந் தாரே | -தி.10 திருமந்.2090 |
என்னும் திருமந்திரத்தால் தெளிவிக்கின்றார். மேலும் அப்பர், தில்லைத் திருவிருத்தத்தில் (தி.4 ப.81 பா.4),
|