பக்கம் எண் :

24ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

நெஞ்சர்க்கே அருள்செய்வர். இவர் இருக்கும் இடம் திருநள்ளாறு என்கிறார். அப்பாடல் காண்க. நஞ்ச - நைந்த.
வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
   விஞ்சை யின்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
  நஞ்ச நெஞ்சர்க்கு அருளும்நள் ளாறரே.

-தி.5ப.68பா.7

இடர், துன்பம், துயர்:
     வெப்புநோயும் பிறவிநோயும் வறுமைநோயும் கொண்டீச்சுரவனை இடைவிடாது வழிபடுவார்க்கு இல்லை என்கிறது திருக்கொண்டீச்சுவரம் பாடல். மேலும் துன்பமும், துயரும், அவற்றிற்கு ஏதுவாகிய வினையும் இல்லை என்கிறார். துன்பம், துயரம், இடர் என்பன துன்பமே ஆயினும், ஒன்றிற்கொன்று வேறுபாடுண்டு, துன்பம் என்பது உடலைப் பற்றியது, துயரம் என்பது மனத்தைப்பற்றியது. இடர் என்பது பிறவித்துன்பத்தைக் குறிப்பது என்பர். இவையெல்லாம் கொண்டீச்சுரவனைப் போற்றுவார்க்கில்லையாம்
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும் எனும் சூழ்வினை
கொம்பனார் பயில் கொண்டீச் சுரவனை
'எம்பி ரான்' என வல்லவர்க்கு இல்லையே

-தி.5ப.70பா.6

திருவிசயமங்கை:
     திருவிசயமங்கை என்பது காவிரியின் வடகரைத்தலங்கள் 63இல் ஒன்று. இது கொள்ளிடத்தின் தென்கரையில் திருவைகாவூருக்கு அண்மையில் சிறு கோயிலாக உள்ளது. இதுவே பாடல்பெற்ற விசயமங்கை என்பர். இதனை விசமூங்கி என மருவி அழைக்கின்றனர். கொள்ளிடத்தின் வடகரையில் ஜெயங் கொண்ட சோழபுரத்தின் தென்மேற்கே உள்ளதுதான் பாடல்பெற்றது என்று அங்குள்ளோர் கூறுகின்றனர். இரண்டில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளதே பாடல்பெற்றது என்பதில் ஐயமில்லை. இவ்வூரைப்பற்றி அப்பர் திருக்குறுந்தொகையில், "கொள்ளிடக்கரை கோவந்தபுத்தூர்" என்று குறிப்பிட்டுள்ளமையும், பசு பூசித்த வரலாற்று உண்மையுமே இதனை வலியுறுத்துகின்றன. இன்று கோவிந்தபுத்தூர் என மருவி வழங்குகிறது.
     பிரம்மாவும் சிவபிரானைப் போல ஐந்து தலை உள்ளவனாக ஒருகாலத்திருந்தான். அவன், தானும் சிவபெருமானும் ஒன்றே என்று கூறிச் செருக்குற்றான். அப்போது பெருமான், பைரவரை அனுப்பி, பிரம்மனின் நடுத்தலை - உச்சித்தலையைக் கிள்ளி எடுக்கச் செய்தான