1. பொ-ரை: செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே! (தியாகராசனே!) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன்; இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை; ஆயினும் அடியேனை மறவாதே; என்னை நினைந்தருள்வாயாக! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி. கு-ரை: முன்னமே - காலம் வறிதே கழியாத முன்பே; உனை நினையாதொழிந்தேன் என்க. இன்னம் - இன்னமும். உன - உன்னுடையவான (அ-ஆறன் உருபு). மறவல் - மறவாதே. 2. பொ-ரை: விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும், மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தரிளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக! |