பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)59.திருமாற்பேறு609

1671.
கருத்த னாய்க்கயி லாய மலைதனைத்
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே.

10

திருச்சிற்றம்பலம்


    கு-ரை: விசயன் - அருச்சுனன். வெம்காடு - இடுகாடு. நீடுஉகந்து - பெரிதும் விரும்பி. பரலோகம் - மேலான உலகம்.
    10. பொ-ரை: கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை.
    கு-ரை: கருத்தனாய் - தானே தலைவன் என்ற எண்ணமுடையவனாய். தருக்கினால் - ஆணவத்தால். தகர - அழிய. ஆர் அருள் - அரிய திருவருள். அருத்தியால் - ஆசையால். ஆணவம் உடையாரை இறைவன் ஆட்கொள்ளும் மறக்கருணையை நினைப்பித்தது.

திருநாவுக்கரசர் புராணம்

அந்நகரில் அவ்வண்ணம்
   அமர்ந்துறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு
   வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார்
   பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத்
   தொடர்ந்தபெருங் காதலினால்.

-தி.12.சேக்கிழார்.