பக்கம் எண் :


1720.
சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே.

10

1721.

துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப்
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென்
றிட்ட கீத மிசைத்த அரக்கனே.

11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: போரெதிர்ந்துவந்த சூரபன்மனைக் கொன்ற வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், நல்ல கோழம்பம் மேவிய தேவர்தலைவனும் ஆகிய பெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமரலோகத்தை ஆளும் உரிமையுடையவராவர்.
     கு-ரை: சமரசூரபன்மா - போரிலே வல்ல சூரபன்மா என்ற அசுரன். தடிந்த - கொன்ற. வேல்குமரன் - வேலாயுதத்தை உடைய முருகன். தாதை - தந்தையாகிய சிவபெருமான். அமரர்கோ - தேவர்கள் தலைவனாகிய பெருமான். அன்புடைத் தொண்டர்கள் அமரலோகம் ஆளுதலை உடையவர்களாவர்.
     11.பொ-ரை: கொட்ட நறுமணம் வீசுகின்ற கோழம்பத்து இறைவன் என்று விருப்பத்திற்குரிய கீதம் இசைத்த அரக்கன் துட்டனாகித் திருக்கயிலையை எடுக்கலுற்று, அம்மலையின் கீழ்ப்பட்டு விழுந்து படர்ந்து பின் உய்ந்தான்.
     கு-ரை: துட்டன் - துஷ்டன். அஃதின்கீழ் - அதன்கீழ். பட்டு - அகப்பட்டு. வீழ்ந்து - ஆணவம் வீழப்பெற்று. படர்ந்து - பெருமானைப் பற்றி. உய்யப்போயினான் - அநுக்ரகம் பெற்றான். கொட்டம் - மணப்பொருளில் ஒன்று. நாறிய - கமழ்கின்ற. என்றிட்ட கீதம் - என்று வரும் இசைப்பாடல். இசைத்த - பாடிய.