பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)65.திருப்பூவனூர்639

1728.
ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.

7

1729.
பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.

8

1730.

ஏவம் ஏது மிலாஅம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.

9


     7. பொ-ரை: அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும், தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும், வேதம் ஓதும் நாவினனும், மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும், பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன்.
     கு-ரை: ஆதிநாதன் - முதன்மையான தலைவன். அர்ச்சிதன் அர்ச்சிக்கப்படுபவன். வேதநாவன் - வேதமோதும் திருவாயை உடையவன். வெற்பின் மடப்பாவை - இமயமலை அரசனின் புதல்வி. பசந்த - மிகுந்த. பூதப்படைநாதன் என்க.
     8. பொ-ரை: பூவனூரும், குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும், நள்ளாறும், நன்னிலமும், கோவலூரும், குடவாயிலும், கொடுமுடியும், மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள்; காண்பீர்களாக. மூவலூர் வைப்புத்தலம்.
     கு-ரை: பூவனூர் முதலாய ஊர்கள் முக்கண்ணனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர்கள் என்க.
     9. பொ-ரை: விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும்; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும்.