பக்கம் எண் :

642திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1735.
இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீ ருய்ம்மினே.

3

1736.

நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி யென்றுகொல் காண்பதே.

4


     கு-ரை: கறுத்தவர் - சினங்கொண்டவராகிய. எயில்கள் - மதில்கள். வெல்வல - வெல்லுதலில் வல்ல. ஆலும் - ஆடும். பயில்கிலார் - வலஞ்சுழிப் பெருமான் திருநாமத்தைப் பழகாதவர். தொழும்பர் - ஆளானவர்; ஏவல் செய்வார்.
     3. பொ-ரை: இளமைப்பருவத்தேயே எம் பெருமானை அடைந்து வழிபடாத துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே! நும் உடல் வளைந்து முதுமைக்காலம் வந்தவிடத்து திருவலஞ்சுழி இறைவனையே உமக்குத் துன்பம் களையும் துணையாகக் கருதி உய்வீராக.
     கு-ரை: இளைய காலம் - கருவி கரணங்கள் ஓய்ந்து போகாமல் உள்ள இளமைக் காலத்திலேயே. துளையிலாச் செவித் தொண்டர்காள் - "தோளாதசுரையோ தொழும்பர்செவி" என்பது போலச் சிவன் புகழ் கேளாச் செவி கேளாச் செவி என்பதாம். நும் முடல் வளையும் காலம் - உங்களது உடல் மெலிவு அடைந்து முதுமை எய்தும் காலம். களைகணாக - பற்றுக்கோடாக, ஆதரவாக.
     4. பொ-ரை: தேனைக்கொண்ட பூக்கள் நிரம்பிய நீர்கொண்டு திருமுழுக்காட்ட எழுந்த மார்க்கண்டேயனுக்காக வேறொன்றும் குறைவில்லாத கொடிய கூற்றுவனை உதைத்திட்டவனும், வேதங்களை ஓதுதலைக்கொண்ட நாவினனும் ஆகிய திருவலஞ்சுழியிற் பொருந்திய இறைவனை இனிக்காண்பது என்றுகொல்?
     கு-ரை: நறைகொள் - மணம் கொண்ட. பூம்புனல் கொண்டு எழு - சுரங்கப்பாதை வழியே காசிசென்று நாடோறும் அழகிய கங்கை நீரைக் கொண்டு வருகின்ற. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டேயர். குறைவிலா - வலிமையில் குறையாத. கொல் - அசை.