பக்கம் எண் :

646திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

67. திருவாஞ்சியம்

பதிக வரலாறு:
     திருச்சேறை, குடவாயில், நறையூர் முதலிய பல பதிகளை வணங்கித் திருவாஞ்சியம் அணைந்துதொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம். (தி.12.திருநா-புரா-216)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:180

பதிக எண்:67

திருச்சிற்றம்பலம்

1743.

படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.

1

1744.
பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.

2


     1. பொ-ரை: படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான்தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.
     கு-ரை: படையும் - மழு, சூலம் முதலிய ஆயுதங்களையும். புல்வாய்அதள் - மான்தோல். தங்கிய - தரித்த. புடை நிலாவிய - ஊர்ப்புறங்களில் விளங்கிய. அல்லல் - துன்பம்.
     2. பொ-ரை: பறவை வடிவாகிய யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக்கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய திருவாஞ்சியம் சேர்வீராக.