பக்கம் எண் :

654திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1758.
பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனும்
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.

9

1759.

இலங்கை மன்ன னிருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

10

திருச்சிற்றம்பலம்


மறை - எழுதாக்கிளவியாய் செவிவழியாய் ஓதப்பட்டு வரும் மறையாகிய சுருதி.
     9. பொ-ரை: நாம் பணிந்து அடிபோற்றும் நள்ளாற்று இறைவன், பாம்பாகிய அணையத்தக்க பள்ளியினைக் கொண்ட திருமாலும், பூவாகிய பணைத்த பள்ளியிற் பொலிகின்ற புராணனாகிய நான்முகனும், தாம் பணிந்து அளக்க இயலாத ஒப்பற்ற தனித்தழலாக உள்ளவன்.
     கு-ரை: அணை - படுக்கை. பள்ளிகொண்ட - உறங்குதலைக் கொண்ட. பரமன் - மேலான திருமால். பூம்பணை - வயல்களில் தோன்றிய தாமரை. பொலிகின்ற - விளங்குகின்ற. புராணன் - தொல்லோனாகிய பிரமன். தாம் - இருவர் தாமும். பணிந்து- வணங்கி. அளப்பொண்ணா - அளக்க ஒண்ணாத. தனித்தழல் - தழலாய் நின்றவன்.
     10. பொ-ரை: இலங்கை மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் இற்று மனஞ் சுழலும்படியாகத் திருக்கயிலாயப் பெருவரையின் மேல் திருவிரல் ஊன்றியவரும், நன்மை மிகுந்த திருநீற்றருமாகிய நள்ளாறரை நாள்தோறும் வலம் வந்து வணங்குவார் வினைகள் மாயும்.
     கு-ரை: இற - நொறுங்க. மலங்க - கலங்க. மால்வரை - பெரிய கயிலைமலை. மாயும் - அழியும்.