பக்கம் எண் :

338
 

79. திருவீழிமிழலை

நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப்பாதையில் பூந்தோட்டம் தொடர்வண்டி நிலையத்துக்கு மேற்கே 10 கி, மீ, தொலைவில் உள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம்.

சோழவளநாட்டில் காவிரித்தென்கரையில் விளங்கும் 61ஆவது தேவாரத்தலம்.

இத்தலம் காத்தியாயன மகரிஷியின் யாகத்தில் தோன்றிய உமாதேவியாரைத் திருமணம் செய்துகொண்டு இறைவன் என்றும் மணக்கோலத்தோடும் இருக்கும் தலம். திருமால் சக்கரம் பெறும் பொருட்டு, நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூவைக்கொண்டு அர்ச்சிக்க, ஒருநாள் ஒருமலர் குறைய, அதற்காகத் தமது தாமரைமலர் போன்ற கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்துச் சக்கரம் பெற்றதலம். திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞானசம்பந்த சுவாமிகளும் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கியதலம். இத்தலத்து வடக்குவீதியில் அப்பர் சம்பந்தர் திருமடங்கள் தனித்தனியே இருக்கின்றன. மூவர் அருளிய 23 பதிகங்களும், சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரி நாதரின் திருப்புகழும் உள்ளன.

விமானம் :

விண்ணிழி விமானம். இது விஷ்ணுவால் தாபிக்கப் பெற்றது. மூலத்தானத்துக்குப் பின் பார்வதி பரமேசுவரரது திரு உருவங்கள் உள்ளன. இங்குக் காழிக்கோலத்தைச் சம்பந்த மூர்த்திக்கு இறைவன் காட்டியருளினார்.

விழா :

சித்திரைத்திங்களில் பெருவிழா நிகழும். மணக்கோலத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. மணவாளப் பெருமான் திருவடியில் திருமால் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளம் இன்றும் இருக்கிறது. சுவாமி நேத்திரார்ப்பணேசர்; வீழியழகர் எனவும் வழங்கப் பெறுவர். அம்மை சுந்தரகுசாம்பிகை.