பக்கம் எண் :

782
 
430.தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்

சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்

உழுவாரக்கரி யவ்விடை யேறிஒன்னார்

புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்

முழவாரொலி பாடலொ டாடலறா

முதுகாடரங் காநட மாடவல்லாய்

விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

6


431.கடமாகளி யானை யுரித்தவனே

கரிகாடிட மாஅனல் வீசிநின்று

நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்

நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே

படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்

பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்

விடவார் அர வாவெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

7



6. பொ-ரை: உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே, அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய், நின்றவனே, வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே, உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே, பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே, பேய்களின் ஓசையாகிய அழகுநிறைந்த மத்தளஒலியும், பாட்டும், குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே, விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

கு-ரை: விடை ஒற்றையாகலானும், தேவர் ஆகலானும் உழுவார்க்கு உதவாதாயிற்று. சிரிப்பினின்றும் எழுந்து சென்றமையால், ''தீயெழ ஓடுவித்தாய்'' என்றார். முதுகாடாதலின், முழவு முதலியன பேயின் முழக்கமே என்க. 'மறுகில்' என்பது பாடம் அன்று.

7. பொ-ரை: மதநீரையுடைய பெரிய மயக்கங்கொண்ட யானையை உரித்தவனே, கரிந்த காடே இடமாக நெருப்பை வீசிநின்று