இராசராசேச்சரம் கட்டி முடிவுபெற்ற காலம்: இராசராச சோழன் தன் ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டு நாள் இருநூற்று எழுபத்தைந்தில் ஸ்ரீ இராசராசேச்சரமுடையார் ஸ்ரீ விமானத்துச் செம்பின் ஸ்தூபித் தறியில் வைக்கச் செப்புக்குடம் ஒன்றைக் கொடுத்த செய்தியை அவன் கல்வெட்டுப் பகுதி (S.I.I. Vol II, part 1, page 3) உணர்த்துகின்றது. எனவே கோயில் கட்டி முடிவு பெற்ற காலம் (கி. பி. 985 + 25 ) கி.பி. 1010 அதாவது இற்றைக்கு 959 ஆண்டுகள் ஆகும். இராசராசேச்சரத்துக் கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர்: இக்கோயில் கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவர், சோழமன்னர்களின் கல்வெட்டுக்களில், இராசராசேச்சரம் உடையார்,இராசராசேச்சரமுடைய பரமசுவாமி எனக் குறிக்கப்பெற்று உள்ளனர். மல்லப்ப நாயக்கர் கல்வெட்டில் “ தஞ்சாவூர் பெரிய உடைய நாயனார் ’’ என்னும் பெயர் காணப்படுகிறது. இதுவே தஞ்சைப் பெருவுடையார் என்று வழங்கப்பெறுகின்றது. இக்கோயிலில் முதலாம் இராசராச சோழன் எழுந்தருளுவித்தனவும், கொடுத்தனவுமாகிய வேறு திருமேனிகள்:தட்சிணமேருவிடங்கர், மகாமேருவிடங்கர், சண்டேசுவர பிரசாததேவர், இவர் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார், சண்டேசுவரரின் தந்தையார் விழுந்து கிடந்தாராய் உள்ளவர், பிரசாதம் பெறுகின்றாராகக் கனமாகச் செய்த சண்டேசுவரர், மகாதேவர், பஞ்சதேக மூர்த்திகள் முதலான வேறு திருமேனிகளை, முதலாம் இராசராசன் இக்கோயிலில் எழுந்தருளுவித்துள்ளான். ஆடவல்லான் என்னும் கல்லால் எண்ணூற்று இருபத்தொன்பது கழஞ்சே முக்காலே மூன்று மஞ்சாடி நிறையுள்ள ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவரையும், பாதாதிகேசாந்தம் மூவிரலே மூன்று தோரை உயரமும், நான்கு திருக்கைகளிலும் பிடித்தருளிய சூலமும், கபாலமும், பாசமும், தமருகமும், வெள்ளியின் பாதபீடமும் உள்பட நிறை எழுபத்திரு கழஞ்சரையுள்ள பொன்னின் க்ஷேத்திரபால தேவர் ஒருவரையும் கொடுத்துள்ளான். முதலாம் இராசராச சோழனது திருத்தமக்கையாரும், தேவிமார்களும், அரசியல் அலுவலாளர்களும் எழுந்தருளுவித்த திருமேனிகளும் பிரதிமங்களும்;’ இராசராசதேவர், திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியதேவர், மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார், |