பார்த்திருந்து - தோன்றுதலை எதிர்நோக்கியிருந்து. அலச-வருந்த, ‘அவர்களிடம் செல்லாமல் என்பால் வந்து என் மனத்தில் நீ குடிகொண்ட இந்நிலைக்கு நான் என்ன தகுதியுடையேன் ! எனது தொண்டுதான் என்ன தகுதியுடையது’ என்றபடி. அம் மனம்-அழகிய மனம் ; அடியவர் மனம். குளிர்நாள்- மகிழ்வதற்கு அமைந்த நாளில். சிவபெருமானது விழாக்களில் அவன் பலிக்கு (பிச்சைக்கு) எழுந்தருளும் விழாவும் ஒன்றாதல் அறிக. அரிவையரது குழல் அவிழ்தல். இறைவனைக் காதலித்தமையாலாம். குழல் சுரும்பு-கூந்தலில் உள்ள வண்டுகள் ‘‘பொம்மென’’ என்றது. ஒலிக் குறிப்பு. 150. ‘சொல் முறை நவில்’ என மாற்றி, சொற்களை, ஒலிக்கும் முறைப்படி சொல்கின்ற’ என உரைக்க. உணராச்சூழல்-எட்டலாகாத இடம். ‘‘கல் நவில்’’ என்றதில் நவில். உவம உருபு. கண்ணில் அகப்பட்டமை பற்றி, அதனை வலையாக உருவகித்தார். பெரியது-பெரியதொரு கருணை. உளதே-உண்டோ. ஆரணத்துள் அகப்படாமை அவை சொல்வடிவாதலாலும், கண்வலைப்பட்டமை அதனைச் செலுத்துகின்ற உணர்வின் தூய்மையாலும் என்க. மின் நவில்-ஒளிமிகுந்த. வாய்தல்-வாயில் மாடம், கோபுரம். பொன் நவில்-பொன் மிகுந்த. புரிசை-மதில். ‘வாய்தல்’ மாடம், புரிசை இவைகளையுடைய வீதி’ என்க. |