பக்கம் எண் :

திருமுறை]29. கோயில்199


இத்திருப்பாட்டின்  இரண்டாவதும்,  மூன்றாவதும்  ஆகிய அடிகளில்
உள்ள   பாடங்கள்   உண்மைப்   பாடங்களாகத்   தோன்றவில்லை.
பாடபேதங்களும்  பலவாகச் சொல்லப்படுகின்றன. எனவே, இரண்டாம்
அடியில்,  ‘‘நாய்’’  என்றதன்பின்  ‘சேந்தன்’ என்னும் சொல் அமைய
ஓதுதல்  பாடமாகக்  கொண்டு,  மூன்றாமடியில், ‘அந்தமில் ஆனந்தச்
செந்தேன்  எனப்புகுந்து’  எனக்  காட்டப்படும் பாடத்தை உண்மைப்
பாடமாகக்  கொள்ளுதல்  பொருந்துவதாம்.  ஆயினும், இது பொழுது
ஓதப்பட்டுவரும் பாடமே இங்குக் கொள்ளப்படுகின்றது. சீரடியார் அடி
நாய்-சிறப்புடைய   அடியவரது   அடிக்கீழ்நிற்கும்  நாய்போன்றவன்.
என்றது,  தம்மைப்  பிறர்போலக் கூறியதாம். ‘செப்புரையால் கூறுதும்’
என மூன்றாவது விரித்து முடிக்க. ஆனந்தச் சேந்தன்- ஆனந்தத்தைப்
பெற்ற சேந்தன். இஃது, ஆளப்பட்டபின்னர் அடைந்த  நிலைமையைக்
கூறியது.  ஆருயிர்மேற்  பந்தம்-அரிய  உயிரின்மேல்  நிற்கும் கட்டு.
பிரிய-நீங்குமாறு. பரிந்தவன்-அருள் செய்தவன்.
 

திருச்சிற்றம்பலம்.
 
ஒன்பதாந் திருமுறை குறிப்புரையுடன்
 
முற்றிற்று.

 

முன்னாள் பதியா யினுமே தகுசீர்
   மூலப் பதியா ளுடைமுக் கணனே
பொன்னார் தருபொய் கையுடைப் புனிதா
   பொடிசேர் வடிவே முடிவே யடியே
னென்னா தரவார் தருபூ சைகொள்வா
   யினியாய் முனியா தெனவோ திமடுப்
பன்னாண் மலர்கொய் ததின்மூழ் கியருட்
   பாதங் களணைந் துபணிந் தனனே.            (13)

                             ----கோயிற் புராணம்.