இந்த நிலநிவந்தத்தை உணர்த்தும் கல்வெட்டினால் முதலாம் இராசராசன் காலத்தில் இருந்த வாய்க்காலின் பெயர்கள்:- பெருவளவாய்:- இது மழநாடான ராஜாஸரிய வளநாட்டுப் பாச்சில் கூற்றத்து மீய்பலாற்று அன்பனூரில் குறிக்கப் பெற்று உள்ளது. இது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் ஓடுவது. நாட்டார் வாய்க்கால்:- இது வெண்கோன் குடிக்கண்டத்தில் உள்ளது. இதுவும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பாய்வதாகும். பைங்கேணி வாய்க்கால்:- இது பாச்சில் கூற்றத்து மீய்பலாற்று அன்பனூரில் குறிக்கப்பெற்றுள்ளது. இது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் கொள்ளிடத்தின் வடபால் ஓடுகிறது. இது மழநாட்டில் பாயும் வாய்க்காலில் பெரியது. பாண்டவயாறு:-இது விண்ணாற்றிலிருந்து பிரிந்து செல்வது தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ளது. அறியப்படும் பிடாரிக் கோயில்கள்: பாச்சில் கூற்றத்துக் கீழ்பலாற்றுத் துறையூரில் பிடாரி புன்னைத்துறை நங்கை, கோயிலும், பிடாரி பொதுவகை ஊருடையாள் கோயிலும், குதுரை வட்டமுடையாள் கோயிலும் இருக்கின்றன. வேறுகோயில்கள்: ஐயன் கோயில் (ஐயனார் கோயில்), புகழீஸ்வரம் முதலான கோயில்கள். சில சம்பிரதாயச் சொற்கள்: இக்கோயிலில் வழங்கிவந்த சம்பிரதாயச்சொற்கள், திருப்பள்ளித்தாமம், திருப்பரிசட்டம், திருவொற்றாடை, திருவமுது, திருமஞ்சனம், திருப்பரிகலம் முதலானவைகளாகும். இவைகளுள் திருப்பள்ளித்தாமம் - என்பது பூவைக் குறிக்கும். ‘திருப்பள்ளித்தாமம் பறிப்பார்க்கும்’ என்னும் கல்வெட்டுப் பகுதி இதனை உறுதிப்படுத்தும். “ சடைமேலணியத் திருப்பள்ளித்தாமம் பறித்துச் சாத்துவார்’’ என்னும் இலக்கியச் சான்றையும் காண்க. (பெரிய புராணம்). திருப்பரிசட்டம் என்பது இறைவர்க்கு அணிவிக்கும் ஆடை. திருவொற்றாடை என்பது, |