ளோடும் தானே திருமாளிகைத்தேவர் மேல் படை தொடுத்து வந்தான். குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோலத் தேவர் ஒப்பிலா முலையம்மையிடம் சென்று விண்ணப்பித்தார். அம்பிகை மதில்நந்திகளையெல்லாம் அழைத்து ஒரு நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள். நந்திதேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளையெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்துவந்து நிறுத்தினார். அரசன் திருமாளிைகைத் தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இரந்தான். திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைப் பணிந்து நின்றான். திருமாளிகைத்தேவரும் தன்னை வணங்கியமன்னனுக்கு அருள்புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை வணங்கினார்; அரசன் அருள் பெற்றுச் சென்றான். திருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றுள்ளது. இவ்வரசன் வந்து தங்கிய இடம் நரசிங்கன் பேட்டை என வழங்குகிறது. இவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலில் நந்திகள் இல்லை. பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்குகிறது. அற்புதங்கள்:- திருமாளிகைத்தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சவத்தின் புகையை நறுமணம் கமழும்படிச்செய்தார். கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணீரை வற்றச்செய்தார். சிவபெருமானுக்கு நிவேதனமாகித் தமக்கு வந்த பயிற்றஞ் சுண்டலை தம் திருமடத்தில் பாத்திகட்டி விதைத்து பலன்பெறச் செய்தார். இவர் திருவீழிமிழலையில் இருந்தகாலத்தில் அங்கு நடந்த தேர்த் திருவிழாவின்போது மக்களால் இழுக்கமுடியாது ஓடாதிருந்த தேரை வடத்தைக் கழற்றிவிட்டுத் தானே அத்தேரினை ஓடுமாறு செய்தார். இன்னோரன்ன அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து, தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் பின் வருமாறு பாடியுள்ளார். குடங்கர் விசும் பிடைநிறுவிக் குணபம் நடந் திட இயக்கிக் கொடிஞ்சிப் பொற்றேர் வடங்கழற்றி ஓட்டிமதில் நந்திகளை வர வழைத்து வரைநன் காட்டின் |