2. சேந்தனார் திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். பட்டினத்தாரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம், அதில் உள்ள பொருள்களை அள்ளிக்கொள்ளுமாறு செய்தார். அதுபொழுது பட்டினத்தாரின் சுற்றத்தார்கள் சோழ வேந்தனிடம் சென்று முறையிட்டனர். சோழமன்னன் சேந்தனாரைச் சிறையிலிடும்படி ஆணை பிறப்பித்தான். ‘‘மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி செய்த்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே’’ எனப் பட்டினத்தார் இறைவனை வேண்டினர். சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையினின்றும் விடுதலைபெற்றார். மனைவி மக்களுடன் தில்லையம்பதி சென்று, விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்திவந்தார். நாள்தோறும் விறகுவிற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அருத்தும் திருத்தொண்டாற்றி வந்தார். ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட்டிற்கு எழுந்தருளினார். சேந்தனார் அளித்த களியாகிய உணவினை ஏற்று அதன் ஒரு பகுதியைத் தன் திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படிச் செய்தருளினார். இதனை, ‘‘செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு.......ஆகியதே’’ என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் நாம் அறியலாம். சேந்தனார் நடராசப் பெருமானுக்குத் தவிட்டை அமுதாக நிவேதனம் செய்தார் என்னும் செய்தியை, ‘‘வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை’’ என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம். ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்போது மார்கழித் திருவாதிரைத் திருவிழா வந்தது. நடராசப்பெருமான |