தம் திருமகனார்க்குத் திருவாலியமுதன் என்று பெயரிட்டு அழைத்தனர். வைணவர் குடியில் தோன்றிய திருவாலியமுதனார் சிவபிரானிடத்துப் பேரன்பு செலுத்தி அருணலம் பெற்றுச் சிவனடியாராகத் திகழ்ந்தார். தில்லை நடராசப் பெருமானையே தம் குலதெய்வமாகக்கொண்டு சிவபக்தியில் சிறந்து விளங்கினார். பெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் தோறும் திருப்பதிகம் பாடிப் பரவிவந்தார். பெரும்பாலும் இவர் சிதம்பரத்திலேயே வதிந்துவந்தவர் என்பர். திருவாலியமுதனார் தம்மை ‘மயிலையர் மன்னன்’ என்றும் ‘அந்தணன்’ என்றும், தாம் பாடியருளிய திருவிசைப்பா இரண்டாம் பதிகத்தின் திருக்கடைக்காப்பில், ‘‘வரைசெய்மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி’’ எனவும் கூறிக்கொள்வதால் இவர் மயிலையிற் பிறந்தவர் என்பதும்’ அந்தணர் குலத்தினர் என்பதும் புலனாகின்றன. நான்காம்பதிகத் திருக்கடைக்காப்பில் ‘‘அறை செந்நெல் வான்கரும்பின் அணியானைகள் சூழ்மயிலை’’ என்று கூறுவதால் மருதவளம் சூழ்ந்த மயிலை என அறியப்படுகிறது. மயிலை என்பது மயிலாடுதுறையேயாதல் வேண்டும் என்பர். திருவாலியமுதர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு ஆகும். அவையனைத்தும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியனவேயாகும். காலம்:- திருவாலியமுதர் பாடியருளிய திருவிசைப்பா மூன்றாம் பதிகத்தில் 5 ஆம் பாடலில் ‘எடுத்த பாதம்’ மழலைச் சிலம்பு’ என்ற தொடர்கள், முதல் இராசராச சோழனால் (கி.பி. 985-1014) தஞ்சைப் பெரிய கோயிலில் கைங்கரியங்களுக்காக நியமிக்கப்பெற்ற தளிச்சேரிப் பெண்டுகள் (தேவரடியார்கள்) சிலருக்கும் பெயராக வழங்கப்பெற்றதை ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. எனவே திருவாலியமுதனார் காலம், முதல் இராசராச சோழனுடைய கி.பி. 985-1014 ஆம் காலத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு. 8. புருடோத்தமநம்பி திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் எட்டாமவராக அமைந்தவர் புருடோத்தமநம்பி. புருஷோத்தமன் என்ற பெயர் திருமால் பெயர்களில் ஒன்று. இவர் தம்மை ‘‘மாசிலா |