இறைவன் பண்பாகும். இப்பெருந்தகவை எடுத்துப் பேசாத அடியர் உலகச் சமயங்களிலேயே இல்லை எனலாம். அன்றியும், அப்பரடிகள் உலகிற்கு வழங்கும் செய்தி இப் பெருங்கருணையே ஆகும். சைவம் சார்ந்து முதற்பதிகம் மொழிந்தருளும் நிலையில், ‘முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே’ என்பர் சேக்கிழார்.1 அக்கடலில் மூழ்கி எழுந்து வழங்கிய இன்றமிழ்ப் பாடல்களைக் ‘கருணைக் கனிகள்’ எனிற் பிழையும் உண்டோ? தாம் விரும்பிச் சொல்ல முற்படுவது ‘இறைவன் கருணைச் செய்தி’ ஒன்றுமே என்பதை எடுத்துக் காட்டற்கே பதிகந்தோறும் இராவணனை அப்பரடிகள் நினைவு கூர்ந்து பாடுகின்றனர். இத்தகு இறைவனைப் ‘பித்தன்’2 ‘அழகன்‘3 என்கின்றார் கருவூர்த்தேவர். பின்னே ‘கங்கைகொண்ட சோழபுரத்து’ப் பதிகத்தில் ‘பித்தன் என்று ஒருகாற் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்வான்’ என்று தேவரே பாடுவது4 தம்மையும் கருதியதாகலாம்; சுந்தரரையும் குறித்ததாகலாம். சேந்தனார் பாடும் திருப்பல்லாண்டும் ‘பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே’ என்றே பாடுகிறது.5 திருஞானசம்பந்தரும் அப்பரடிகளுங்கூடப் பிரானைப் பித்தன் என்று போற்றும் இடங்களும் உண்டு. பிழைத்தன பொறுக்கும் பெருங்கருணையை, இவ்வாசிரியரே ‘பிரியுமாறு உளதே, பேய்களோஞ் செய்த பிழை பொறுத்தாண்ட பேரொளியே’ எனப் பாடுவர் பிறிதோரிடத்தும்.6 இவ்வழகிய திருப்பாடல் அடியில் வருவதாகும்: ‘‘பழையராந் தொண்டர்க் கெளியரே மிண்டர்க்கரியரே பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும்
1. அப்பர் புராணம 2. திருவிசைப்பா -94, 140 3. திருவிசைப்பா -94 4. திருவிசைப்பா -140 5. திருப்பல்லாண்டு -289 6. திருவிசைப்பா -118 |