சிற்றம்பலத்துள் நட்டம் ஆடும் நாயகன் அந்தணர்களால் தொழப்படும் அந்தண்மையாளன். ‘‘பூவேந்தி மூவாயிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற’’ கோவாக-ஞானக் கொழுந்தாக-குணக் குன்றாக சேவேந்து கொடியானைத் தரிசிக்கிறோம். திருநாவுக்கரசர் ஓர் திருக்குறிப்பை உணர்ந்தார். ‘அடியவற்காகக் கன்றிய காலனைக் காலால் கடிந்தவனைச் சென்று தொழுது ஒன்றியிருந்து நினைமின்கள். அச்சிற்றம்பலத்து நட்டம் என்றுவந்தாய் என்ற திருக்குறிப்பை யருளும்’ என்று அனுபவப்பொருள் பேசுவார் அப்பர். திருமாளிகைத் தேவர் ‘கோயில்’- பற்றிப் பாடிய ‘இணங்கிலாவீசன்’ என்னும் பதிகத்துள் இத்திருக்குறிப்பைப் புலப்படுத்துவார். ‘‘உருக்கியென் னுள்ளத்துள்ளே யூறலந் தேறன்மாறாத் திருக்குறிப் பருளும் தில்லைச் செல்வன்’’ -என்பது அது. எட்டாந் திருமுறையின் இனிய நினைவுகள்: தேனூறுஞ் செஞ்சொல் திருக்கோவையாரின் முதற் பாடலில் மனதைப் பறிகொடுத்தார் போலும் திருமாளிகைத் தேவர். கோவையாரின் சொல்லும் பொருளும் திருவிசைப்பாவில் பயிலும் பாங்கைப் பாருங்கள். ‘‘திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையோர் வல்லியி னொல்கி யனநடை வாய்ந்து உருவளர்காமன்தன்வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே’’ -திருக்கோவையார். ‘‘கருவளர் மேகத்தகடு தோய் மகுடக் கனக மாளிகை கலந்தெங்கும் பெருவளர் முத்தீநான் மறைத் தொழில்சால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் தெய்வப் பதிவதி நிதியந் திரண்ட சிற்றம்பலக் கூத்தா உருவளரின்பச் சிலம் பொலி யலம்பும் உன்னடிக் கீழ தென்னுயிரே’’ -திருவிசைப்பா. |