‘‘அம்பரா! அனலா! அனிலமே! புவி நீ அம்புவே! யிந்துவே! யிரவி உம்பரால் ஒன்றும் அறியொணா அணுவாய் ஒழிவற நிறைந்த வொண் சுடரே!’’ -பா-120. எனத் திருமுறையுள் பாராட்டுவார் கருவூர்த் தேவர். ஈறிலான் எங்கள் இறை: ‘‘நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடிநா ராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறிலாதவ னீச னொருவனே.’’ -அப்பர் சுவாமிகள். செத்துப் பிறக்கின்ற தெய்வங்களின் தலைவனாகச் செம்மாந்து நிற்பவன்தான் செஞ்சடை விரித்த செம்மல். சேவிக்க வந்த அயனும் இந்திரனும் செங்கண்மாலும் எங்கும் நெருங்கிக் குழாங் குழாமாய் நின்று கூத்தாடும் தில்லையின் பெருமையைச் சேந்தனார் பல்லாண்டில் பகருகிறார். ஆதியும் அந்தமுமில்லாச் சோதி எனச் சொல்லாமல் சொல்கிறார். என்னை இறைவன் ஆட்கொண்ட விதம் எப்படித்தெரியுமா! அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்தினில் கோயில் கொண்டான். அந்தத் ‘தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனினம்பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கொடியேன் என்று கூடுவது என்று ஏங்கும் கண்டராதித்தரின் எண்ணங்கள். ‘‘இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நீ ஆண்டாய்’’ என்றும், ‘‘தேனைப் பாலைக் கன்னலின் தெளியை யொளியைத் தெளிந்தார்தம் ஊனையுருக்கு முடையானை உம்பரானை வம்பனேன் நானின் அடியேன் நீயென்னை யாண்டா யென்றால் அதுசிரிப்பதற்கிடமாகுமே’’ |