‘‘பித்தனென் றொருகாற் பேசுவ ரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் கைத்தல மடியேன் சென்னிவைத்த கங்கை கொண்ட சோளேச் சரத்தானே.’’ -பா.140 இறைவனது அருட்பார்வை பட்டவுடன் பாவம் பறைந்தோடும். அது ‘பாலொடு கலந்தநீர் தழல்பட்டவுடன் மறைந்துவிடுவது போல’ என்ற உவமை எண்ணுதற்கு இனியது. ‘‘பண்ணிய தழல்காய் பாலளாம்நீர்போல் பாவமுன் பறைந்து பாலனைய புண்ணியம் பின்சென்று’’ -கருவூர்த்தேவர். நின்றதென்பார் பாதாதிகேசமாகப் பார்க்குமழகு: திருவாலியமுதனார் நெஞ்சங்கொண்ட நம்பியைப் பாதாதி கேசமாகப் பார்த்துப் பாடும் அழகே அழகு. ‘தில்லையம்பலத்தானின் செய்யபாதமும், சிலம்பு கிண்கிணியும், மணிபுரைதருதிரண்ட வான்குறங்கும், தாழ்ந்தகச்சும், திருவயிறும், வயிற்றினுளுந்தி வான் சுழியும், திகழுதர பந்தமும், தடக்கை நான்கும் தோள்களும், தடமார்பின் பூண்களும், விடங்கொள் கண்டமும், செய்யவாயின் முறுவலும், செவியிலிலங்கு தோடும், நெற்றி நாட்டத்தொடு பொலியும் பிறைகொள் சென்னியும், மற்றை நாட்ட மிரண்டொடு மலரும் திருமுகமும் என்னெஞ்சம் பிரியாது நின்றனவே, என்று சிந்திப்பரிய சிவனை வந்திக்கிறார். ‘பேயொடாடும் இந்தப் பெருந்தகை புலித்தோல் பூண்டு, நல்லரவே பூணாகக் கொண்டு-விடையில் ஊர்ந்து- கொடுமலையில் வாழ்ந்தாலும்-என் நெஞ்சம் அவனையே நினைக்கின்றதே இது என்ன விந்தை’ என்று ஒரு தலைவி ஏக்கப் பெருமூச்சு விடுகிறாள். ‘‘உடையும்பாய் புலித்தோலு நல்லரவமும் உண்பதும் பலிதேர்ந்து விடையதூர்வது மேவிடம் கொடுவரை யாகிலு மென்னெஞ்சம்’’ |